சோழர்களை வாசிப்பது ஏன் முக்கியம்? தமிழகத்தின் 2,500+ ஆண்டுகள் வரலாற்றில், முதன்முதலில் தமிழ் நிலம் முழுமையும் சோழர்கள் ஆட்சியில்தான் ஒரே ஆட்சிப் பரப்பானது. தமிழ்நாட்டின் முதல் பேராட்சியாளர் ராஜராஜன். ராஜராஜன் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் நிலம் முழுவதும் தமிழ் ஒரே வரி வடிவத்துக்கு மாறியது. இன்றைக்கு நாம் எழுதும் தமிழ் எழுத்து வடிவம் அக்காலத்தில்தான் நிலைபெற்றது. நீராலும் தமிழ் நிலத்தை ஒன்றிணைத்தார்கள் சோழர்கள். சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரியும் சோழர் கட்டுமானமே, குமரியின் பெரியகுளம் ஏரியும் சோழர் கட்டுமானமே; கோவையின் சிங்கநல்லூர் ஏரியும் சோழர் கட்டுமானமே, நாகையின் திருப்பூண்டி கீரன் ஏரியும் சோழர் கட்டுமானமே! தமிழ்க் கொடியைத் தமிழ் நிலம் தாண்டியும் பறக்கவிட்டவர்கள் சோழர்கள். சோழர்களுக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய உயரத்தைத் தமிழ் ஆட்சியாளர்கள் எவரும் தொடவில்லை. கிராமங்கள் வரை இந்த அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும் செய்தார்கள் சோழர்கள். அரசியல் எதிரிகள் உள்ளிட்ட பல சமூகங்களுடனும் சோழர்கள் மணவுறவு கொண்டிருந்தனர்; அதேபோல, எல்லா மதத்தினருக்கும் உரிய மதிப்பளித்தனர். தமிழ் நல்லிணக்கத்தின் வரலாற்று அடையாளம் சோழர்கள். எல்லாவற்றுக்கும் மேல் சோழர்களுடைய பெருமையும் சிறுமையும் தமிழர்தம் வரலாறு. நம்முடைய மூதாதையர் அவர்கள்!