இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள். எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?