கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது அன்பை தெரிவிக்கும் விதமாக மிஸல்டோ சிறுகிளையினடியில் முத்தமிட்டுக்கொள்ளும் வழக்கம் உலகநாடுகள் பலவற்றில் இருக்கிறது. கிருஸ்துமஸ் மரங்கள் பயன்பாட்டிற்கு வந்ததின் பின்னால் நீண்ட வரலாறு இருக்கிறது உணவு மருந்து ஆகியவற்றை அளிக்கும் தாவரங்களுடன், கலாச்சார முக்கியத்துவம் கொண்டிருக்கும் பல தாவரங்களின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. வரலாறு மட்டுமல்ல இந்த நவீன யுகத்திலும் தாவரங்கள் மொழி கலை இலக்கியம் பண்பாடு என அனைத்திலும் பெரும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றை குறித்து இணைய இதழ்களில் வெளியான எனது நெடுங்கட்டுரைகளின் தொகுப்பு இந்த முத்தச்சிறுகிளை நூல். இதை வெளியிடும் அகநி பதிப்பகத்தாருக்கும் திருத்தங்களை சொல்லி செப்பனிட உதவி, அணிந்துரையும் அளித்திருக்கும் திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் சொல்வனம் இணைய இதழுக்கும் என் நன்றியும் அன்பும். மரங்களால் சூழப்பட்டு, ஒரு காட்டின் சிறு துண்டென பசுமை நிறைந்திருந்த இந்த கிராமத்து வீட்டிலிருந்து,சில வருடங்களுக்கு முன்பு அதிகார துஷ்பிரயோகத்தால் வெட்டி எடுத்து செல்லப்பட்டு சில ஆயிரம் ரூபாய்களுக்கு விற்கபட்ட மில்லிங்டோனியா, அகேஷியா மற்றும் அல்பீஸியா மரங்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன். அந்த மூன்று பெருமரங்களிடமும் அவற்றை காப்பாற்ற முடியாமல் போனதன் பொருட்டு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் லோகமாதேவி முத்தச்சிறுகிளை