நிறங்களின் உலகம்
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும் கதையே ‘நிறங்களின் உலகம்’. ‘கடை’ என்கிற தன்னுடைய முதல் நாவலில் காட்சிப்படுத்தப்பட்ட யதார்த்த வாழ்விற்காக வாசக கவனம் பெற்றிருந்த சீருடையானின் பேனாவிலிருந்து பசியெனும் மைநிரப்பி எழுதப்பட்டிருக்கும் பாண்டியின் வாழ்க்கைப்பாடே நிறங்களின் உலகம்! வாழ்வின் நிஜத்தையும் அதன் நிறத்தையும் மர்ம முடிச்சுகளையும், அது நிகழ்த்திப்பார்க்கும் வன்மத்தையும் யதார்த்தமான தனித்த மொழியில் பதிவுறுத்துகிற மிகச்சிறந்த நாவல் `நிறங்களின் உலகம்’.